Saturday, October 6, 2012

மாந்துறையான் ...

...
எங்களுடைய குலதெய்வம் ஆதரவளிக்கும் ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர்
எங்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ண சாமி
...

படைத்த உயிர்களுக்கெல்லாம் படியளிக்கும் பார்வதியை இட்ப்பாகத்தில் கொண்ட ஈசன், மருண்டு தவித்த மானுக்கருளிய பரமதயாளமூர்த்தியை

"நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே"

-எனப்பல வகைகளாக உணர்ந்து தொழுது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் மாந்துறையும் ஒன்று. (இரண்டாம் திருமுறை 110வது திருப்பதிகம்)

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம்.
கும்பகோணத்திற்கு அருகில் மாந்துறை என்றொரு ஊர் இருப்பதால், இது வடகரை மாந்துறை எனவும், கும்பகோணத்தில் அருகில் உள்ளது தென்கரை மாந்துறை எனவும் வழங்குகின்றன.

முருகன் அருள் பெற்று திருப்புகழ் பலவற்றினை வாய்மலர்ந்த அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.

ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார்.

துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள். இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை.

பிரகாரத்தில் திருப்புகழில் பாடிய சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். (திருப்புகழ் பாடல்.899)

மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.

இவ்வூர் காயத்ரி நதிக் கரையில் அமைந்துள்ள புண்ணியத்தலம். இங்கு காவிரித் தாயே தன் கரங்களை வடதிசை நோக்கி விரித்து காயத்ரி நதியாக ஓடி வருகிறாள்.

அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை.

கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.

தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக பேரழகு கொண்ட சமுக்யா தேவி பிறந்தாள். அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள்.

நாளுக்குநாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி).

பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை.

தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.

இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை:

மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அங்காரக சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார்.

ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.

இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார்.

தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.

திருவண்ணாமலையில் சிவபெருமானின் முடி கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றித் தனது பாவத்தைப் போக்கிக் கொண்டதாகவும் கூறுவர்

முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர். தல வரலாற்றின்படி, மான்களாய்ப் பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்பதும் உண்டு. இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளமை இதன் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது

கோயிலின் மூலவர் 'ஆம்ரனேஸ்வரர்' (ஆம்- என்பது வடமொழியில் மாங்காயைக் குறிப்பது). மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் இவருக்கு 'மிருகண்டீஸ்வரர்' என்று மற்றொரு பெயரும் உண்டு. 'சுத்த ரத்னேஸ்வரர்' என்று பெயரும் உண்டு.
அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை; அழகு உயர்ந்த அம்மை என்று கூறுவதும் உண்டு).

சூரியனார், சந்திரனார் மற்றும் இந்திரன் ஆகியோர் இங்கு வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கரை போன்ற கிராமங்களில் வசித்தவர்களும், அவர்கள் மரபில் வந்து தற்போது உலகெங்கும் பரவியுள்ள பலரும், மாந்துறையில் உள்ள இக்கோயிலினை இன்றளவும் புண்ணியத்தலமாகவும், இந்த இறைவனை மாந்துறையான் என்ற வழக்குப் பெயருடன் குல தெய்வமாகவும் கொண்டுள்ளனர்.

இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது. கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.

மாந்துறை கருப்பண்ண சாமி கோவில் அருள் வாக்கு ஒரு காலத்தில் ரொம்ப பிரபல்ம். அங்குள்ள பூசாரிக்கு அடிக்கடி அருள் வரும். அவ்வாறு வரும் போது உடுக்கு அடித்து மிக உயரமாகத் துள்ளிக் குதிப்பார். சொன்னால் சொன்ன படி நடக்கும். இப்போது அந்த சக்திவாய்ந்த பூசாரி அங்கு இல்லை. அவருடைய வாரிசு தான் பூசாரியாக இருக்கிறார்.

...

பிறப்பின் மூலமே குலதெய்வம்.

குலதெய்வ வழிபாடு என்பது நம் அனைத்து முன்னோர்களுக்கும் முதலான ஆதி முன்னோர் என இறைவனையே நம் முன்னோராக கருதி வழிபடுவதாகும். நம் கலாச்சார பூஜா விதிகள் அவ்வாறு வழிபடாமல் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பலன் இருக்காது என்கிறது.

குலதெய்வத்தை மறந்துவிட்டால் .....
மனசஞ்சலம், காரியங்களில் 99% அடைந்து பிறகு தோல்வியை தழுவுவது, தீர்க்க முடியாத உடல் நோய்கள், ஆன்மீக வளர்ச்சியில் தடை, குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து உறவினர்களால் கைவிடப்படுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எளிமையாக சொல்வதானால் ஒரு மனிதன் கடமையை தவறினால் என்ன நடக்குமோ அத்தனையும் நடக்கும்.

...

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த 'திருமாந்துறை' தேவாரத் திருப்பதிகம்
(இரண்டாம் திருமுறை 110வது திருப்பதிகம்)

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
லேத்துதல் செய்வோமே.

விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச்
சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
யன்றிமற் றறியோமே.

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது
கெழுமுதல் அறியோமே.

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே.

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படுந் தவத்தோரே.

பெருகு சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.

நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
நிரைகழல் பணிவோமே.

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
தீநெறி யதுதானே.

நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
அதுவவர்க் கிடமாமே.

வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே.

பொழிப்புரை :

வேங்கை , ஞாழல் , செருந்தி , செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும் , சந்தனமரம் , மாதவி மலர் , சுரபுன்னை மலர் , குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம்

விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் , மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை , அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம் .

தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம் .

இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை , பிறை , அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம் .

கோங்கு , செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை , தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர் .

சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி , மதி , மன்னர்கள் , மருத்துக்கள் அன்போடுவழிபடும் திருவடிகளை வணங்குவோம் .

மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந் தவனும் , மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம் .

மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை , நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர் .

நீல மணிகளையும் , முத்துக்களையும் , மலர்களை யும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள்.

சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர் . நீண்ட மூங்கில் , தேன் பொருந்திய வேலமரம் , மாங்கனி , வாழைக் கனி , நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ளதிருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே.

மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத் தனாய் , சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர் .

...

திருப்புகழ் பாடல் (899) - "திருமாந்துறை"

ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.

நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற திருமாந்துறைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

...

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது ...

...
தலையாய சித்தர் அகத்தியரின் அருள் வாக்கையும் அதன் தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வது சில வேளை கடினமாக இருக்கும்.

ஒரு சிலர் விஷயத்தில் முன் அறிவிப்பாக எடுத்து சொல்லியும் திருந்தாத அல்லது திருந்த விரும்பாத மனிதர்கள், வாழ்க்கையை அல்லது உயிரை இழந்து நின்ற தருணங்கள் உண்டு.

அப்படித்தான், ஒருநாள்..........

இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால். அன்று வந்தவர்களுக்கு நாடி படித்து முடிக்கும் போது மணி இரவு ஒன்பதாகிவிட்டது. மிகவும் அசதியாக இருந்ததால், இனி நாடி வாசிக்க இருந்தவர்களை மறுநாள் காலை வர சொல்லிவிட்டு, நாடியை மூடி பூசை அறையில் வைத்துவிட்டு இரவு போஜனத்துக்கு சென்றேன். சாப்பிட தொடங்கும் முன் ஒருமுறை அகத்தியரை மனதார நினைத்துவிட்டு சாப்பாட்டில் கை வைக்க, யாரோ மிக அருகில் வந்து எனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் காதுக்குள் "சீக்கிரம் சாப்பாட்டை முடித்துவிட்டு, நாடியை படி" என்று உத்தரவு கொடுத்ததுபோல் கேட்டது.

இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லையே, இன்று மட்டும் ஏன் இப்படி? என்று திகைத்துப்போய் கேட்டு விட்டு வேகமாக சாப்பாட்டை முடித்து, கை கால் முகம் சுத்தம் செய்து பூசை அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு நாடியை எடுத்து படித்தேன்.

அதில் வந்த செய்திகள் அதிர வைத்தது. ஒரு குறிப்பிட்ட பெறும் புள்ளியின் பெயரை சொல்லிவிட்டு,

"இன்று இரவு ரகசியமாக கங்கை கரையில் ஒரு யாகம் நடத்தப் போகிறார்கள். இந்த யாகம், அதர்வண வேதத்தை பயிற்சி செய்யும் ஒரு சிலரின் துர் போதனையால் ஒருவரின் ஆயுளுக்கு பங்கம் இருக்கிறது என்று, ஆயுளை நீட்டி அவர் உயிரை காப்பாற்ற வேண்டி செய்கிறார்கள். இதுவரை அதர்வண வேதத்தை பிரயோகம் செய்து அப்படிப்பட்ட ஒரு யாகத்தை இந்த தரணியில் யாரும் செய்தது கிடையாது. அதை செய்வது அவர் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் கெடுதலை தான் விளைவிக்கும். யாரை காப்பாற்ற இதை செய்கிறார்களோ அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது. அவரை காப்பாற்றவும் முடியாது, மேலும் இதை செய்தால் அதன் பலனாக நாட்டில் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்படும். அந்த குடும்பமும் மொத்தமாக அழிந்துவிடும். அதை தடுத்து நிறுத்த சொல். அகத்தியன் கூறியதாக சொல். இது பெரிய இடத்து விஷயம் ஆனதால், என் பெயரை சொல். உனக்கு எந்த கெடுதலும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்."

அவர் சொன்ன பிரமுகரோ மிகப் பெரிய இடத்துக்காரர். அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அகத்தியர் சொன்னதாக சொல்ல போய் கடைசியில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்து விடாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு. அகத்தியர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வேறு சொல்லிவிட்டார். கண்டிப்பாக அதற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று தீர்மானித்து, மனதை ஒருநிலை படுத்தி, செய்தியை உரியவரிடம் சொல்ல தயாரானேன்.

அந்த காலங்களில், இன்று போல் தொலைபேசி தொடர்பு என்பது அத்தனை தூரம் விரிவடையவில்லை. பிரமுகரிடம் போன் இருந்தாலும், என்னிடம் கிடையாது. அப்படி இருந்தாலும் அவரது தனிப்பட்ட நம்பர் கிடைப்பது என்பது மிக அரிதான விஷயம். என்ன செய்வது என்று யோசித்து, தபால் தந்தி நிலையத்திற்கு சென்று அவர் பெயருக்கு "மின்னல் வேக தந்தி" கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஸ்கூட்டர் வைத்திருக்கும் ஒரு நண்பரை அவசரமாக வரவழைத்து, விஷயத்தை சொல்லாமல், உடனடியாக தபால் தந்தி நிலையத்துக்கு வண்டியை ஓட்டச்சொன்னேன்.

போய் சேர்ந்ததும் மணி பதினொன்று முப்பது. பன்னிரண்டு மணிக்கு யாகம் தொடங்கிவிடும். அதற்கு முன் தகவல் அவர்களை போய் சேரவேண்டும். அவசராவசரமாக விண்ணப்பத்தை வாங்கி எழுதி கொடுத்து, பெறுனர் முகவரியை எழுதிய உடன், அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதை பார்த்து விட்டு அரண்டு போனார்.

"என்ன நீ! இந்த விஷயத்துக்காக எங்கே எந்த இடத்தில் கை வைக்கிறாய் என்று புரிந்து தான் செய்கிறாயா? அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதற்கும் ஒரு முறை யோசித்துக்கொள் என்றார்."

நான் தைரியமாக "இது அகத்தியர் சித்தரின் உத்தரவு. என்னை அவர் காப்பாற்றுவார். இதை அவர் உத்தரவின் படி தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்" என்று கூறி கை ஒப்பம் இட்டேன்.

அந்த விண்ணப்பத்தை வாங்கி படித்து, பெறுநரின் விலாசத்தை படித்த அந்த ஆபிசில் வேலை பார்த்த ஊழியர், என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம் கலந்திருந்தது.

"சார்! தப்ப எடுத்துக்காதீங்க! இந்த தந்தி தேவையா!" என்றார்.

இப்படி கேட்ப்பார் என்று தெரிந்தே "தம்பி! கவலை படாதீங்க! அதை உரியவருக்கு உடனே அனுப்புங்க. என் விலாசத்தை முழுமையாக எழுதி இருக்கிறேன். ஏதாவது உங்களை விசாரித்தால், என் விலாசத்தை கொடுங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றேன்.

இருந்தாலும், அவர் அந்த விண்ணப்பத்தை தன் மேல் அதிகாரியிடம் கொண்டு காட்டி நான் சொன்னதை சொல்லவும், அந்த மேல் அதிகாரி என்னை ஆபீசிற்குள் அழைத்தார்.

உள்ளே சென்ற என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்த பின், "ஏதோ நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் தந்தியை அனுப்புகிறோம். நாளை ஏதாவது பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு. விசாரித்தால், உங்கள் விலாசத்தை கொடுத்துவிடுவோம்" என்றார்.

"தாராளமாக செய்யுங்கள். ஆனால், இந்த தந்தி மட்டும் இப்பொழுதே செல்லவேண்டும். அது போவதை பார்த்த பின் தான் நான் இங்கிருந்து போவேன்" என்றேன்.

மேல் அதிகாரியின் அனுமதியுடன், அந்த ஊழியர் என் கண் முன்னே அந்த தந்தியை உரியவருக்கு தட்டச்சு செய்தார். அது அந்த பக்கம் போய் சேர்ந்தது என்ற உறுதியும் எனக்கு தந்தார்.

நண்பரை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நன்றி சொல்லி, "நீ தைரியமாக போய் வா. உனக்கு ஒரு பிரச்சினையும் வராது. உன் பெயரை வெளியிடவே மாட்டேன்" என்று உறுதி கூறியவுடன் தான் அவர் புறப்பட்டு சென்றார்.

வீட்டிற்குள் சென்று பூசை அறையில் நின்று அகத்தியரை மானசீகமாக வேண்டிய பின் "உங்கள் வார்த்தைகள் யாரிடம் சென்று சேரவேண்டுமோ அவரிடம் இப்பொழுது சென்று சேர்ந்திருக்கும். பிரச்சினை வராமல் காப்பாற்றுங்கள்" என்று வேண்டிய பின் உறங்க சென்றேன்.

நள்ளிரவில், நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை, யாரோ கதவை தட்டும் சத்தம் உணர்த்தியது. எழுந்து மணியை பார்க்க கடிகாரம் காலை நான்கு மணி என்று காட்டியது.

இந்த நேரத்தில் யார் வந்து கூப்பிடுகிறார்கள்? சரி! கதவை திறந்து பார்ப்போம் என்று தீர்மானித்து கதவின் அருகில் செல்லும் முன் இரண்டாவது முறை வாசல் கதவு தட்டப்பட்டது. வேகமாக சென்று திறந்து பார்க்க..........

வாசலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.

வாசலில் வந்து நின்ற இருவரும் உயர்ந்த பதவியை வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் என்று பார்த்த போதே புரிந்தது. அவர்களின் மிடுக்கும், பார்வையும், அவர்கள் அணிந்துள்ள உடையில் குத்தப்பட்டிருக்கும் நட்ச்சத்திரங்களும் அனைத்தையும் தெரிவித்தது.

என் பெயரை குறிப்பிட்டு "எங்கே அவர்?" என்ற அதிகார தோரணையில் கேள்வி கேட்க தொடங்கினார் அவர்களில் ஒருவர்.

நான் தான் அவர்கள் கேட்கும் ஆள் என்று அறிமுகப்படுத்தி கொண்டவுடன்

"நீங்கள் தான் நேற்று இரவு இந்த தந்தியை கொடுத்ததா?" என்று கேட்டனர்.

"ஆம்" என்றதும்,

"யாருய்யா நீ? யாருக்கு தந்தி அடித்திருக்கிறாய் என்று தெரியுமா? என்ன தைரியம் இருந்தால் நேரடியாக இப்படி ஒரு தந்தியை அடித்திருப்பாய்? அது சரி! மிக ரகசியமாக வைக்கப்பட்டு நடத்த தீர்மானித்திருந்த அந்த யாகம் உனக்கு எப்படி தெரியும்? யாரெல்லாம் உன் கூட இருக்கா? எப்படி உள்ளே நுழைஞ்சு இந்த தகவலை பெற்றீர்கள்? என்னென்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியும்?" என்று அவர்களில் ஒருவர் பதில் சொல்ல விடாமல் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.

அவர்கள் கேள்விகளின் தாக்கத்தை பார்த்தபோது, என்னை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல் இருந்தது. அவர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்க தொடங்க, அது வரை வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்த நான் "உள்ளே வாருங்களேன், அமர்ந்து பேசுவோமே" என்று அழைத்தேன்.

உள்ளே வந்தவர்கள், வீட்டை ஒரு நோட்டம் போட்டனர். எங்கும் சுவாமியின் படங்கள். என்ன நினைத்திருப்பார்களோ, கேள்வியின் தொனியை சற்று தளர்த்தினார்கள். நானோ தலையாய சித்தர் அகத்தியரிடம் "அய்யா! நீங்கள் சொன்ன படி தான் நடந்து கொண்டேன். எதிர் பார்த்தது போலவே, பிரச்சினை வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்கிறது. எப்படி எதை சொல்வது என்று கூறுங்கள்" என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டேன்.

"வீட்டுல யாரெல்லாம் இருக்கீங்க?" அவரில் ஒருவர்.

"நானும், மனைவியும் என் குழந்தைகளும்"

"எங்க வேலை பார்க்கறீங்க?"

பதில் சொல்லிவிட்டு " நீங்க என்ன தெரிஞ்சுக்க இத்தனை விசாரிப்புகள் பண்றீங்க?" என்றேன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"ரகசியமாக வைக்கப்பட்டிருந்த யாகத்தை பற்றிய தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? அது முதல்ல எங்களுக்கு தெரியவேண்டும். நீங்கள் இருப்பதோ இங்கு, யாகம் நடத்த நிச்சயித்த இடமோ கங்கை கரை. உங்க ஆளுங்க யாராவது அந்த கூட்டத்தில இருக்காங்களா? உண்மைய சொல்லுங்க" என்று அதிகார தோரணையில் கேட்கத்தொடங்கினார்.

அவர்கள் கேள்வி நியாயமானது. ரகசியமாக வைத்திருந்த தகவல், இந்தியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு ஊரில் எப்படி தெரியவந்திருக்கும்? யாகம் நடத்த தீர்மானித்திருப்பவரோ மிக சர்ச்சைக்குள்ளாகி உயர்ந்த பதவியில் இருப்பவர். அவரது பாதுகாப்பு வளையத்தில் எங்கேனும் ஒரு ஓட்டை விழுந்து விட்டதோ என்று அவர்களுக்கு சந்தேகம்.

அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இருந்தாலும் நான் என்னை பற்றி கூறத் தொடங்கினேன்.

"அகத்தியர் ஜீவ நாடியில் வந்ததை அவர் உத்தரவின் பேரில் தான் அறிவித்தேன். அதில் அகத்தியர் கூறியதெல்லாம் இன்றுவரை அப்படியே நடந்துள்ளது. பாரத கண்டத்துக்கு எப்பொழுதேனும் ஒரு தீங்கு வருமானால், அதற்கு முன்னரே அறிவிப்பு தந்து, பிரார்த்தனைகள் வழியும், யாகாதி கர்மங்கள் வழியும் பரிகாரம் பண்ணி வருகின்ற ஆபத்தின் பாதிப்பை இல்லாமல் செய்ய நினைக்கிற ஒரு சித்தர். என்னிடம் இருப்பது ஜீவ நாடி. அதில் எழுத்துக்கள் இருக்காது. கேட்கிற கேள்விக்கோ அல்லது தானாக உத்தரவின் பேரில் செய்தி வரும் போது ஸ்வர்ண நிறத்தில் எழுத்துக்கள் தோன்றும்."

"அப்படியா? அது இப்போ எங்க இருக்கு?"

"அய்யா! அது என் பூசை அறையில் தான் இருக்கிறது."

"பார்க்கவேண்டுமே"

"அய்யா பூசை அறைக்குள் வெளி ஆட்கள் யாரையும் வர விடுவதில்லை"

"அப்படியானால், நீங்கள் போய் எடுத்து வந்து காட்டுங்கள்."

"தாராளமாக! ஆனால் நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும். நான் போய் குளித்து த்யானம், பூசை முடித்தபின் அவரது உத்தரவு இருந்தால் தான் வெளியே கொண்டு வரமுடியும். உங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லை என்றால், நானும் போய் வருகிறேன்."

"எப்படி நீங்கள் சொல்வதை நம்புவது?" அதில் ஒருவர் திடீரென்று கேட்டார்.

"நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! எனக்கு வேற வழி தெரியவில்லை. நான் ஒன்றும் ஓடி போய் விட போவதில்லை. எனக்கும் கடமைகள் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. நான் செய்வதில் தவறு இருந்தால் அந்த தந்தியில் அனுப்புனர் இடத்தில் பொய் விலாசம் இருந்திருக்கும். இல்லையே! என் முழு விலாசத்தை தானே கொடுத்திருந்தேன். ஏன்! நீங்கள் தபால் தந்தி அலுவலகத்தில் விசாரித்த போது இப்பொழுது நான் கூறியதை, அவர்கள் விசாரித்ததை தானே சொல்லி இருப்பார்கள். இரண்டுமே பொருந்தி இருக்குமே. மேலும் நீங்கள் வரும்போது நான் இங்கு தானே இருக்கிறேன். தலை மறைவாகவில்லையே. இதற்குமேல் உங்களுக்கு என்ன தெளிவு வேண்டும்?" என்றேன்.

ஒரு நிமிட அமைதி நிலவியது. நான் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப தொடங்கினார்கள். அந்த ஒரு நிமிட அமைதிக்குள் என் காதில் மட்டும் கேட்க்கும் படி வேறு ஒரு முக்கிய பிரமுகரின் பெயரை சொல்லி, "அவர் பெயரை கூறி விசாரித்துக்கொள்ள சொல்!" என்றார் அகத்தியர்.

அந்த முக்கிய மனிதர், அகத்தியரின் பக்தர். இங்கு வரும்போதெல்லாம் நாடி பார்த்து தன் வாழ்வை செம்மை படுத்திக் கொண்டவர். அந்த முதல் முக்கிய பிரமுகருக்கு இந்த மனிதர் மிக நெருக்கம்.

"சரி! உங்களது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை", என்று கூறி அந்த மனிதரின் பெயரை கூறி, அவரிடம் என்னை பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள் என்றேன்.

"அவர் அகத்தியரிடம் தான் நாடி படிக்கிறார். அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். முயற்சி செய்து பாருங்களேன்" என்றேன்.

அந்த மனிதரின் பெயரை கூறியவுடன், அவர்கள் இருவர் முகத்திலும் ஆச்சரியம். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர்,

"நீங்கள் சொல்வதும் ரொம்ப பெரிய இடமாக இருக்கிறதே. சரி விசாரிக்கிறோம்" என்று கூறி ஒருவர் மட்டும் வெளியே சென்று போலீஸ் வண்டியில் இருக்கும் தொலை தொடர்பு வசதியை உபயோகித்து செய்தியை யாரிடமோ சொன்னார்.

"விசாரிக்க சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்வது மட்டும் தவறாக இருந்தால், உங்களை நாங்கள் எங்கள் இருப்பிடத்திருக்கு அழைத்து சென்று தனியாக கவனிக்க வேண்டி வரும். நினைவிருக்கட்டும்" என்றார்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அதுவரை அவர்கள் நாடியை பற்றி தீர் விசாரித்தறிய தொடங்கினார்கள். எல்லா உண்மைகளையும் உரைக்க தொடங்கினேன். இந்த யாகத்தை ஏன் அகத்தியர் நடத்த கூடாது என்று உரைத்தார் என்பதையும் அவர்களிடம் உரைத்தேன். அவர்கள் முகம் வெளிறிவிட்டது.

பதினைந்து நிமிடம் கழிந்தவுடன், ஒருவருக்கு செய்தி வந்தது. செய்தியை வாங்கியவர், என் முன்னே அதை கூறினார்.

"இவரை தொந்தரவு செய்யாமல் திரும்பி செல்க. நான் முக்கிய பிரமுகரிடம் பேசிக் கொள்கிறேன்" என்று.

அவர்கள் இருவரும் என்னை ஒரு விதமாக பார்த்தனர்.

"நாங்கள் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும். எங்கள் வேலையை தான் செய்ய முயற்சி செய்தோம். உங்களிடமும், அகத்தியரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி கிளம்ப தொடங்கினார்கள்.

"அய்யா ஒரு விஷயம்" என்றேன் நான்.

"சொல்லுங்கள்" என்றனர் ஒருவித பணிவுடன்.

"இந்த விஷயம் தயவு செய்து வெளியே தெரிய வேண்டாம். அது பின்னர் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பது தலையாய சித்தர் அகத்தியரின் வாக்கு. உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் " என்றேன்.

"நாங்கள் எங்கள் பணி நிமித்தமாக இதை உபயோகபடுத்தி தான் ஆகா வேண்டும். அது இன்றி இந்த விஷயம் வெளியே கசியாது. நாங்கள் வருகிறோம்" என்று கூறி இறங்கி சென்றனர்.

பதினைந்து நாட்களுக்கு பின் அந்த முக்கிய மனிதர் என்னை பார்க்க வந்தார்.

உற்சாகமாக வரவேற்று முதலில் அவருக்கு நன்றியை கூறினேன்.

"நீங்கள் மட்டும் அன்று உதவி செய்யவில்லை என்றால், நான் இன்று என்ன நிலைமையில் இருப்பேனோ தெரியாது. அன்று குறிப்பாக அகத்தியர் உங்கள் பெயரை கூறி விசாரிக்க சொல்ல சொன்னார். அதனால் தான் அந்த காலை வேளையிலும் உங்களை தொந்தரவு செய்திருப்பார்கள்" என்றேன்.

என் நன்றியை ஏற்றுக்கொண்டாலும், அவர் முகத்தில் சந்தோஷ களை காணப்படவில்லை. என்ன நடந்தது என்பதை தீர விசாரித்தார். அனைத்தையும் கூறினேன். பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தவர், சற்று நேர அமைதிக்கு பின்,

"இனிமேல் அகத்தியர் சித்தர் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

"எப்பொழுதுமே அவர் தானே நம்மை வழி நடத்துகிறார், அதில் என்ன சந்தேகம்?" என்றேன்.

"இல்லை. அந்த யாகம், தீர்மானித்தபடி அந்த நேரத்துக்கு நடத்தப்பட்டுவிட்டது." என்ற பேரிடியை தூக்கி போட்டார்.

அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், என் நிலைக்கு திரும்பவே சில நிமிடங்களாயிற்று. என் வரையில் இடப்பட்ட பணியை செவ்வனவே செய்திருந்தாலும், அது எதிர் பார்த்த பலனை அளிக்கவில்லையே என்ற வருத்தம் என்னுள் துளிர்த்தது. என் உள் உணர்வுகளை ஒதுக்கி தள்ளி விட்டு சற்று நேர அமைதிக்கு பின்

"உண்மையில் அன்று என்னவெல்லாம் நடந்தது என்று கூற முடியுமா?" என்றேன் அவரிடம்.

போலீஸ் வழி அவரிடம் அன்று விடியற் காலையில் செய்தி வந்து சேர்ந்ததும், என் பெயர் கூறி விசாரித்தவுடன், நான் பிரச்சினையில் இருப்பதை உணர்ந்து, என்னை விடுவிக்க சொல்லி உத்தரவிட்டதும், பின்னர் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். அனைத்தையும் அறிந்தவுடன், அன்று காலையே கிளம்பி சென்று முக்கிய பிரமுகரை சந்தித்து பேசி இருக்கிறார். முக்கிய பிரமுகருக்கு நாடியில் ஒன்றும் அவ்வளவு நம்பிக்கை இல்லாததால், வந்த தந்தியை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டபின், அந்த யாகத்தையும் தொடர்ந்து நடத்த சொல்லி இருக்கிறார்.

இவர் போய் "ரகசியமாக நடத்த நினைத்த யாகம், ஒரு நாடியில் வருகிறதென்றால், அந்த நாடி உண்மை என்று உணரவேண்டாமா? ஏன் யாகத்தை நடத்தினீர்கள்?" என்று கேட்டதற்கு,

"எத்தனையோ பேர்கள் இதுபோல் நடப்பது, நடக்க போவதை எல்லாம் சொல்கிறார்கள். எல்லோரையும் நம்புவதில்லை. எனக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதை தான் நான் செய்தேன். யாகம் செய்தவர்கள் சொன்னதில் எனக்கு உடன்பாடிருந்ததால் என் குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பை மனதில் கொண்டு அதை செய்ய உத்தரவிட்டேன். உங்களுக்கு, அதில் நம்பிக்கை இருந்தால் நம்புங்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இனிமேல் இதை பற்றி பேசக்கூடாது" என்று உத்தரவு இட்டார் அந்த முக்கிய பிரமுகர்.

அகத்தியர் சொன்னால் அப்படியே நடக்கும் என்று எப்போதும் நம்புகிற இவருக்கு அதற்கு மேல் எதையும் பேச முடியவில்லை. மௌனமாக ஆனால் இனி இந்த நாட்டில் என்னென்ன சேதங்கள் நிகழப் போகிறதோ என்கிற மனக்கவலையுடன் என்னை காண வந்துள்ளார்.

"அகத்தியர் நாடியில் என் மன கவலைக்கான பதிலை பெற்று தர முடியுமா?" என்று கேட்டார்.

"கேட்டு பார்க்கிறேன். ஆனால் என்ன பதில் வருகிறதோ அதை நீங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அகத்தியரை நிர்பந்த படுத்த முடியாது" என்றேன்.

தலையாய சித்தர் அகத்தியரை பிரார்த்தித்துவிட்டு, நாடியை படிக்க தொடங்கினேன்.

"சித்தர்கள் ஆகிய நாங்களெல்லாம், இந்த மனிதர்கள் திருந்தட்டுமே என்று தான் தவறு செய்ய புகுவோரை, முன்னரே எச்சரிக்கை செய்கிறோம். அதையும் மீறி, சிலவேளை விதி, தன் பலத்தை காட்டும். ஆறறிவு படைத்த மனிதருக்கு சிந்திக்கும் திறமையை கொடுத்த தெய்வம், ஒரு சிலருக்கு அதை இந்த மாதிரி நேரங்களில் அகம்பாவம் என்ற உணர்வை கொடுத்து, வேலை செய்ய விடுவதில்லை. இங்கு நடந்ததும் அதுதான். இனி நடக்க போவதை பொறுத்திருந்து பாருங்கள்." என்று கூறிவிட்டு,

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை சுட்டி காட்டி "இதை நீங்கள் இருவரும் ஒரு மண்டலம் ஜெபித்து வாருங்கள். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சுருக்கமாக கூறி நிறுத்திக் கொண்டார்.

இனி அவரிடமிருந்து இந்த விஷயத்தில் பதில் வரப்போவதில்லை என்று உணர்ந்து, வந்திருந்தவரும் விடை பெற்றார்.

பதினைந்து நாட்கள் சென்றது..............

ஒருநாள் மதியம் வானொலி வழியாக அந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாருடைய ஆயுளுக்கு பங்கம் என்று யாகத்தை நடத்தினார்களோ, அவர் அன்று காலையில் நடந்த ஒரு கோர விபத்தில், கழுத்துக்கு கீழே அனைத்து பாகங்களும் சிதைந்து போன நிலையில் இறந்து போனார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த நிறைய அப்பாவி மக்களும் அவருடன் போய் சேர்ந்தனர். இதன் தொடர்பாக எதிரொலித்த கலவரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தவர்களும் அதிகம் பேர்கள்.

அவரின் இழப்பில், அந்த முக்கிய பிரமுகர் நொறுங்கி போனார். அதர்வண வேதம் இத்தனை வேகமாக வேலை செய்யும் என்று, அன்று தான் நானும் உணர்ந்தேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின், அவர் இறந்த அதே மணி துளியில், அந்த முக்கிய பிரமுகரும், கொல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு நாடெங்கும், கலவரம், கொலை, கொள்ளி வைப்பு என்று ஜாதி மத, இன பேதமின்றி நடந்தது. அனைத்து இயக்கமும் நின்று போனது. குறிப்பிட்ட சமூகத்தினர் லட்ச்சக்கணக்கில் உயிர் இழந்தனர் அல்லது வாழ்க்கையை மொத்தமாக தொலைத்து நின்றனர். சுமுகமான நிலை திரும்புவதற்கே பல நாட்களாயிற்று.

அகத்தியர் உத்தரவின் பேரில், எவ்வளவு முடியுமோ அத்தனை பேரை/நண்பர்களை அழைத்து சென்று சிவன் கோவிலில் "மோக்ஷ தீபம்" ஏற்றினேன். ஏற்றி முடித்ததும், போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.

வீடு வந்து சேர்ந்து "எல்லாம் முடிந்துவிட்டதல்லவா?" என்ற கேள்வியுடன் அகத்தியர் நாடியை படிக்க "பொறுந்திருந்து பார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதை படித்துவிட்டு நாடியை மூடிவைத்து, மிகுந்த அசதியுடன் அமர்ந்தேன். கூட வந்த நண்பர்கள் "என்ன செய்தி?" என்றிட. "ஒன்றுமில்லை! ரொம்ப அசதியாக இருக்கிறது" என்று கூறி மழுப்பினேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின் அந்த குடும்பத்தில் மிச்சம் இருந்த ஒருவரும் ஒருநாள் கொல்லப்பட்டார். அந்த வம்சத்தில் ஒருவரும் மிச்சம் இல்லாத படி விதிமகள் உத்தரவால் அழிக்கப்பட்டனர். இவரது மரணத்தினாலும் பல உயிர்கள் சேதமடைந்தது. பல மாதங்களுக்கு அதன் பின் விளைவுகள் நீடித்தது.

சித்தர்கள் பல விஷயங்களை மறைத்து வைத்துத் தான் நம்மிடம் சில விஷயங்களை செய்யாதீர்கள் என்று கூறுகின்றனர். கேள்வி கேட்க்கும் புத்தியுடைய நமக்கு, எதிர் கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர, சரியான கேள்வியை கேட்கத் தெரிவதில்லை. அவர்கள் நம் எதிர்காலத்தை மிக துல்லியமாக கணிக்க தெரிந்தவர்கள். அதை புரிந்து கொண்டு வேட்கையை தணித்து, அவர்கள் காட்டும் வழியில் சென்றால், நல்ல படியாக கரை ஏறலாம்.

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பது நிதர்சன சத்தியம்.

..... தொகுத்தளித்தவர்: Karthikeyan

இவை அனைத்தும் வலைப்பூ "சித்தன் அருள்" பதிவுகள். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


Monday, October 1, 2012

I’ve learned ...


.....

I’ve learned that I cannot make someone love me. All I can do is be someone who can be loved.

I’ve learned that no matter how much I care, some people just don’t care back.

I’ve learned that it takes years to build up trust, and only seconds to destroy it.

I’ve learned that it’s not what I have in my life but who I have in my life that counts.

I’ve learned that I shouldn’t compare myself to the best others can do.

I’ve learned that I can do something in an instant that will give me heartache for life.

I’ve learned that it’s taking me a long time to become the person I want to be.

I’ve learned that I should always leave loved ones with loving words. It may be the last time I see them.

I’ve learned that I'm responsible for what I do, no matter how I feel.

I’ve learned that either I control my attitude or it controls me.

I’ve learned that money is a lousy way of keeping score.

I’ve learned that sometimes the people I expect to kick me when I'm down will be the ones to help me get back up.

I’ve learned that sometimes when I’m angry I have the right to be angry, but that doesn’t give me the right to be cruel.

I’ve learned that true friendship continues to grow, even over the longest distance.

I’ve learned that I should never tell a child their dreams are unlikely or outlandish.  Few things are more humiliating, and what a tragedy it would be if they believed it.

I’ve learned that my family won’t always be there for me. It may seem funny, but people I'm not related to can take care of me and love me and teach me to trust people again. Families aren’t biological.

I’ve learned that it isn’t always enough to be forgiven by others. Sometimes I've to learn to forgive myself.

I’ve learned that no matter how bad my heart is broken the world doesn’t stop for my grief.

I’ve learned that my background and circumstances may have influenced who I am, but I'm responsible for who I become.

I’ve learned that I don’t have to change friends if I understand that friends change.

I’ve learned that I shouldn’t be so eager to find out a secret. It could change my life forever.

I’ve learned that two people can look at the exact same thing and see something totally different.

I’ve learned that no matter how I try to protect my children, they will eventually get hurt and I will hurt in the process.

I’ve learned that even when I think I have no more to give, when a friend cries out to me, I will find the strength to help.

I’ve learned that credentials on the wall do not make me a decent human being.

I’ve learned that it’s hard to determine where to draw the line between being nice and not hurting people’s feelings, and standing up for what I believe.

I’ve learned that people will forget what I said, and people will forget what I did, but people will never forget how I made them feel.