Wednesday, May 15, 2013

தியானம் செய்யும் முறை ...

...


பரிசுத்தமான நீரில் ஸ்நானம் செய்து வெள்ளை ஆடையுடுத்து ஈசுவரனைநோக்கி அமர்ந்து தன்னிடம் தேவதைகளை நியாஸம் (பதிவு) செய்ய வேண்டும்.

உபஸ்தத்தில் பிரம்மா நிலை பெறட்டும்;

பாதங்களில் விஷ்ணுவும்,

கைகளில் ஹரனும்,

தோள்களில் இந்திரனும்,

வயிற்றில் அக்னியும்,

இருதயத்தில் சிவனும்,

கழுத்தில் வசுக்களும்,

வாயில் ஸரஸ்வதியும்,

நாசியில் வாயுவும்,

கண்களில் சூரிய சந்திரர்களும்,

காதுகளில் அசுவினீ தேவர்களும்,

நெற்றில் ருத்திரர்களும்,

தலையின் முன் பாகத்தில் ஆதித்தியர்களும்,

உச்சியில் மஹாதேவரும்,

சிகையில் வாமதேவரும்,

பின்புறம் பிநாகியும்,

முன்புறம் சூலியும்,

இடத்திலும் வலத்திலும்

பார்வதி பரமேசுவரர்களும் நிலைபெறட்டும்.

எல்லாப் பக்கமும் வாயு நிலை பெறட்டும்.

அதற்கப்பால் எங்கும் அக்னி ஜ்வாலை

சுற்றி நிலைபெறட்டும்.

எல்லா அங்கங்களிலும் எல்லா தேவதைகளும் அவரவர்க்குரிய இடங்களில்

நிலைபெற்று என்னை இரக்ஷித்தருளட்டும்.

அக்னி என் வாக்கில் இடங்கொண்டுள்ளது;

வாக்கு இருதயத்திலும்,

இருதயம் ஜீவனாகிய என்னிடத்திலும்,

நான் அமிருதமாகிய பரமாத்மாவிடத்திலும்,

பரமாத்மா பரப்பிரம்மத்தினிடத்திலும் அடக்கம்.

வாயு என் பிராணனிலும்,

பிராணன் இருதயத்திலும்,

இருதயம் என்னிடத்திலும்,

நான் பரமாத்மாவிடத்திலும்,

பரமாத்மா பரப் பிரம்மத்திடத்திலும் அடக்கம்.

அவ்வாறே சூரியன் கண்ணிலும்,

சந்திரன் மனதிலும்,

திசைகள் காதுகளிலும்,

ஜலம் ரேதஸ்ஸிலும்,

பிருதிவி சரீரத்திலும்,

மரஞ் செடி கொடிகள் உரோமங்களிலும்,

இந்திரன் பலத்திலும்,

மழை தலையிலும்,

ஈசானன் கோபத்திலும்,

உயிர் ஆத்மாவிடத்திலும்,

ஆத்மா இருதயத்திலும்,

இருதயம் என்னிடத்திலும்,

நான் அழிவற்ற பரமாத்மாவிடத்திலும்,

பரமாத்மா பரப் பிரம்மத்தினிடத்திலும் அடக்கம் எனத் தியானிக்கின்றேன்.


Courtesy: Blogpost by Sasithara Sharma in "aanmigam"

No comments:

Post a Comment