Wednesday, July 31, 2013

நின்ற திருத்தாண்டகம்

...

சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், " நின்ற திருத்தாண்டகம் " எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - (ஆறாம் திருமுறை)

6.94 - நின்ற திருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
6.094.1

பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
6.094.2

மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.094.3

மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும், ஆறாகியும், வாய்க்காலாகிய வழியாகியும், கடற்கரைக்கழியாகியும், புல்லாகியும், புதராகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும், நீராகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.4

காற்றாகியும், கரியமுகிலாகியும், இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும், கனவாகியும், நனவாகியும், இரவாகியும், நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும், இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும், ஒலிக்கும் கடலாகியும், அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும், நீறணிந்த கோலத்தன் ஆகியும், நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும், நீண்ட ஆகாயம் ஆகியும், அவ்வாகாயத்து உச்சியாகியும், உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவனாகியும், இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.094.5

தீயின் வெம்மையாகியும், நீரின் தண்மையாகியும், நிலத்தின் திண்மையாகியும், திசைகள் ஆகியும், அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும், தாயாகியும், தந்தையாகியும், சார்தற்குரிய பற்றுக்கோடாகியும், நாண் மீனாகியும், ஞாயிறாகியும், குளிர் மதியமாகியும், காயாகியும், பழங்கள் ஆகியும், பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும், அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.6

ஆறு அங்கங்கள் ஆகியும், ஆதியாய வேதங்கள் ஆகியும், அரிய மந்திரங்கள் ஆகியும், ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும், புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும், வெள்ளிய மதி ஆகியும், உலகிற்கு முதல் ஆகியும், வினையாகியும், கங்கை, காவிரி, கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும், கடலாகியும், மலையாகியும், கழி ஆகியும், எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கௌதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
6.094.7

மாதாபிதா மக்கள் ஆகியும், அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும், கோதாவிரி குமரிகள் ஆகியும், கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும், உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும். 'யாது நிகழினும் நிகழ்க' எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிறமுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாதி தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.094.8

பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும், வேள்வித்தீயும், அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும், நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும், நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும், பூவும், அப்பூவிற்குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும், நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும், தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும், செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.094.9

பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும், தன்னையடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும், நீள அகலங்களும் ஆகியும், புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும், பூமியின் பொறைக்குணமும், பண்ணின் இனிமைப் பண்பும், அப்பண்புடைய பாடலும் ஆகியும், மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.10

மாலும், நான்முகனும் ஆகியும், பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும், ஆகியும், எட்டுத்திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும், பரப்பும் பரலோகமும் ஆகியும், பூலோக புவலோக சுவலோகங்களும், அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும், புராணனுக்குரிய பழமையாகியும், தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும், அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும், எழும் ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

திருச்சிற்றம்பலம்


Courtesy: http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_6_94.html





No comments:

Post a Comment