Sunday, January 12, 2014

எண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம்



குசாவும் எண் சக்தியும்

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போல் எண்களும் இன்றைய மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கமாகி விட்டன. எனவே, எந்த அளவிற்கு ஒரு மனிதன் எண் சக்திகளைப் பெறுகிறானோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பண்புகளை எப்படி தெய்வீகமான முறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு விவரிக்கிறோம்.

எண் 1

தமிழ் அல்லது ஆங்கிலம் ஒன்றாந் தேதியில் பிறந்தவர்கள், அல்லது விதி எண்ணை ஒன்றாக கொண்டவர்கள், அதாவது 2.7.1990 (2+7+1+9+9+0 = 28 = 2+8 = 10 = 1+0 = 1) போன்ற தேதியில் பிறந்தவர்களின் வாழ்வில் ஒன்றாம் எண்ணின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இத்தகையோர் செய்ய வேண்டிய இறைவழிபாடுகளைப் பற்றி சித்த கிரந்தங்கள் தெளிவாக உரைக்கின்றன.

1. எண் 1 தனித்த சிவ தத்துவத்தைக் குறிப்பதால் பாண லிங்க மூர்த்திகள் வழிபாடு இவர்களுக்கு தேவையான அனுகிரக சக்திகளை அளிக்கும்.

எண் ஒன்றின் அதிதேவதா நவகிரக மூர்த்தி சூரிய பகவான். சூரிய பகவானுக்கு உரித்தான செந்தாமரை மலர்களால் மாலை கட்டி ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது திருவாதிரை, சித்திரை, சுவாதி போன்ற ஏக நட்சத்திர தினங்களில் அல்லது சதய நட்சத்திர (100 நட்சத்திரங்களின் கூட்டு) தினங்களிலும் இத்தகைய பாண லிங்க மூர்த்திகளுக்கு அணிவித்து ஆராதனை செய்து வருதல் நலம்.

சிறப்பாக புதுக்கோட்டை அருகே ஸ்ரீகொன்றையடி விநாயகர் திருத்தலத்தில் அருள்புரியும் வெட்டவெளி பாணலிங்க மூர்த்தி அற்புதமான வரங்களை அளிக்க வல்ல காருண்ய மூர்த்தி.

2. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பர நாதரை மேல் நோக்கு நாள்களில் வழிபட்டு ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் அளித்து வருதலால் திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்க்கை சுவையானதாக இருக்க எண் ஒன்றின் சக்தி துணை புரியும்.

3. ஸ்ரீபட்சி மேகாந்திரர், ஸ்ரீஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, வலது அல்லது இடது காலை துõக்கி நடனமாடும் நடராஜ மூர்த்திகள், ஸ்ரீதிரிபுர சம்ஹார தாண்டவ மூர்த்தி, ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி போன்ற ஒற்றைக் காலை ஊன்றி நடனமாடும் சிவ மூர்த்தங்கள், ஊட்டத்துõரில் அருள் புரியும் ஏக (ஒற்றை) கல் ஸ்ரீபஞ்சநதன நடராஜ சிலா மூர்த்திகளை அவ்வப்போது தரிசித்து வருதல் நலம்.

4. சிவசூரியன் அருளும் பூவாளூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வணங்கி உதிர்ந்த புட்டு தானமாக அளித்தலால் உயர்ந்த பதவிகளில் நிலவும் நிலையற்ற தன்மை நீங்க அருள் கிட்டும்.

எண் 2

1. சிவ சக்தியின் ஐக்கியத்தைக் குறிப்பது எண் 2. சக்தி அம்சம் பூரணமாகப் பொலியும் தலங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். ஸ்ரீமீனாட்சி அம்மன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி போன்று இறைவனைவிட இறைவியின் சான்னித்தியம் பெருகி உள்ள தலங்களில் அம்பாளையும் சிவபெருமானையும் வழிபட்டு மஞ்சள், குங்குமம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் சிறப்பு.

2. அர்த்தநாரீஸ்வரர் சிறப்பாக அருள்புரியும் திருச்செங்கோடு போன்ற திருத்தலங்களிலும், கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருளும் லால்குடி, உய்யக்கொண்டான் மலை போன்ற திருத்தலங்களில் தேங்காய் எண்ணெய் அகல் தீபமிட்டு தீபம் குளிரும் வரை ஆலயத்தை வலம் வந்து வணங்கினால் கணவன் மனைவியரிடையே அன்பு மிகும், குடும்ப ஒற்றுமை வளரும், எண் 2ன் சக்திகள் பெருகும்.

3. இறைவனுக்கு வலப்புறம் அம்பாள் அருள் புரியும் தலங்களில் மனைவியின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. வெண்தாமரை, சம்பங்கி, முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் அம்பாளுக்கு பூப்பந்தல் அமைத்து வழிபட்டு வந்தால் கணவன் அல்லது மனைவி இழந்து வாடுவோரின் வாழ்க்கையில் மணம் வீசத் தொடங்கும். வீடு, வாசல் போன்றவற்றை வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் பறிகொடுத்தோரின் வாழ்வு சீர்பெற சமுதாய பூஜையாக இத்தகைய வழிபாடுகளை இயற்றுவது நலம்.

4. சந்திர தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலங்களில் திருக்குளத்தில் நீராடி இறைவனுக்கும் நந்திக்கும் வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் உடம்பில் ஊறல், தேமல், அரிப்பு, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களால் அவதியுறுவோர் நலம் அடைவர்.

எண் 3

1. சிவா, விஷ்ணு, பிரம்மா மூர்த்திகள் ஒரு சேர அருளும் மும்மூர்த்தி தலங்களில் வழிபட்டு மா, பலா, வாழை என முக்கனிகளுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்தல் நலம்.

2. நின்று, அமர்ந்து, நடந்த கோலங்களில் பெருமாள் அருள்புரியும் உத்தரமேரூர் போன்ற திருத்தலங்களிலும், இறைவன் மூன்று நிலைகளாக அருளும் சீர்காழி, உளுந்துõர்பேட்டை அருகே இளவனார்சூரக் கோட்டை, புதுக்கோட்டை அருகே திருக்கோளக்குடி போன்ற சிவத் தலங்களிலும் இறைவனை வழிபட்டு மூன்று கண் உள்ள தேங்காய் மூடியைத் துருவி அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து பள்ளி மாணவர்களுக்குத் தானம் அளித்து வந்தால் என்ன படித்தாலும் மூளையில் ஏறவில்லை என்று சொல்லும் குழந்தைகள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவர்.

3. திருவாதிரை நட்சத்திரமும், வளர் மூன்றாம் பிறை சந்திரனும் இணைந்த நாட்களில் சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர் என்ற நாமம் தாங்கியுள்ள மூர்த்திகளையும், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் அருளும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி, துவரங்குறிச்சியில் அருளும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளின் ஜீவசமாதி இவற்றை தரிசனம் செய்து குழந்தைகளுக்கு கல்கண்டு கலந்த பசும்பால் தானம் அளித்து வருதல் சிறப்பு.

4. வியாழக் கிழமைகளில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திகளை வணங்கி மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

எண் 4

1. திருநெல்வேலி அருகே நான்குநேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவானமாமலை பெருமாளை புதன், சனிக் கிழமைகளில் வணங்கி ஒரு மூங்கில் முறத்தில் ஒரு படி பச்சரிசி, மூன்று உருண்டை வெல்லம், இரண்டு உருண்டை மஞ்சள், ஒரு முழுத் தேங்காய் இவற்றை ஐந்து சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.

2. நான்முகன் பிரம்மா தனிச் சன்னதி கொண்டு அருளும் திருச்சி அருகே திருப்பட்டூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வழிபட்டு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால் பிறந்தது முதல் வாழ்வில் துன்பத்தையே அனுபவித்து வரும் அடியார்களுடைய குறைகள் தீரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

3. நான்கு வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலில் இறைவனை வணங்கி, கிரிவலம் வந்து வேதம் ஓதும் மாணவர்களுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்து வருதலால் ஆஸ்துமா, கான்சர், தொழுநோய், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளின் வேகம் தணியும்.

4. நான்மாடக் கூடல் என்று பிரசித்தமாய் விளங்கும் மதுரை மாநகரில் அருளும் அமர்ந்த நிலை ஸ்ரீகூடல் அழகரைத் தரிசனம் செய்து செந்தாமரை மலர்களால் அர்ச்சித்தும், அடுத்த நிலையில் சயனன் கோலத்தில் அருளும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை நீலோத்பவ மலர்களால் அர்ச்சித்தும், நின்ற நிலையில் அருளும் ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாளுக்கு சாமந்திப் பூ திண்டு மாலை அணிவித்து வழிபடுவதால் ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும், நிரந்தரமாய் ஒரு வேலையிலிருந்து வருவாய் பெற இயலாதர்வர்களும் நன்னிலை அடைவர்.

எண் 5

1. உலகில் உள்ள எல்லா இனத்தவரும் வழிபட வேண்டிய உத்தம மூர்த்தியான திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் மூர்த்தியை வழிபட்டு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், புளி சாதம் போன்ற சித்ரான்னங்களைத் தானமாக அளித்தலால் கம்ப்யூட்டர், மைக்ரோபயாலஜி, அணு விஞ்ஞானம் போன்ற ஆராய்ச்சி துறைகளில் ஈடுபடுவோர் நலம் அடைவர்.

2. ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருஅருள் புரியும் திருவையாறு திருத்தலத்திலும், திருச்சி லால்குடி அருகே திருமணமேடு திருத்தலத்திலும் இறைவனை வணங்கி பொன் மாங்கல்யம் தானம் (ஒரு குண்டுமணி அளவாவது) அளித்தலால் அகால மரணம் ஏற்படாமல் இருக்க இறைவன் அருள் புரிவார். மரண பயத்தை அகற்றுவது பஞ்ச மூர்த்திகளின் தரிசனம். இக்காரணம் பற்றியே பெரும்பாலான சிவத்தலங்களில் இறைவனின் பஞ்ச மூர்த்திகளைப் பல்லக்குகளில் ஏற்றி வீதிகளில் வலம் வரும் தெய்வீக வழக்கம் இன்றும் நிலவி வருகிறது.

3. புத பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் திருவெண்காடு திருத்தலத்தில் முக்குள தீர்த்தத்தில் நீராடி வேதம் பயிலும் மாணவர்களுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி, மணி போன்ற பூஜை பொருட்களைத் தானம் அளித்தலால், வயதான காலத்தில் தக்க துணையுடன் வாழும் வசதியையும் நிலையையும் ஈசன் அருள்வார்.

4. ஒரு மாதத்தில் வரும் ரோஹிணி, புனர்பூசம், மகம், ஹஸ்தம், விசாகம் என ஐந்து நட்சத்திரங்களிலும் ராமா சீதா லட்சுமண சகிதமாய் காட்சி அளிக்கும் தெய்வ மூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற ஐந்து அமிர்த சக்திகள் கொண்ட அபிஷேகங்கள் செய்து, இறை மூர்த்திகளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தலைப் பாகை, சேலை, ஜாக்கெட் என்னும் ஐந்து வித ஆடைகளை அணிவித்து ஐந்து விதமான மலர்களால் அலங்கரித்து, சாதம், முறுக்கு, பணியாரம், தோசை, இட்லி போன்ற ஐந்து விதமான பதார்த்தங்களால் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு தானம் அளித்து வந்தால் என்றும் வற்றாத செல்வம் கொழிக்கும் நிலையை அடைவர்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜர் இத்தகைய அபிஷேக ஆராதனைகளை 14 ஆண்டுகள் தொடர்ந்து பஞ்ச பர்வ நாட்களில் நிறைவேற்றி வந்ததால்தான் உயிருடன் சொர்க்க லோகம் செல்லும் உத்தம நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. (பஞ்ச பர்வ நாட்களாவன தமிழ் மாதத்தில் முதல் தேதி, திங்கள்,வெள்ளி, சனிக் கிழமைகள், வளர் சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி திதிகள், கிருத்திகை நட்சத்திரம்).

எண் 6

1. சென்னை ஸ்ரீவெள்ளீஸ்வரர் திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு கால் மெட்டிகளை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருதலால் கண் பார்வை மங்குதல், மாலைக் கண், புற்று நோய் போன்ற கண் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

2. கழுதையை வாகனமாக உடைய ஸ்ரீபல்குனி சித்தர் அருளும் பூவாளூர் திருத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொண்டு கழுதைகளுக்கு காரட், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அளித்து வந்தால் மாடாக உழைத்தும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாத நிலை மாறி உழைப்புக்கேற்ற ஊதியமும், பண வரவும் கிட்ட இறைவன் அருள்புரிவார். மூதாதையர்களுக்கு வழிபாடுகள் விடுபட்டிருந்தால் அதற்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

3. சுக்ர வார அம்மன் அருளும் தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ராகு நேரத்தில் வழிபாடுகள் இயற்றி தானே அரைத்த மஞ்சளால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபடுதலால் தீர்க்க சுமங்கலித்துவம் பெற அன்னையின் அருள் கிட்டும்.

4. பல யுகங்களாக முருகப் பெருமாளின் அருளை வேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சுக்ர மூர்த்திக்கு தற்போது ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்தைத் தாண்டி உள்ள கிரிவலப் பகுதியில் ஏக முக தரிசனத்தை அடுத்து முருகப் பெருமானின் தரிசனம் கிட்டியது. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை வணங்கி சண்பக மலர்களால் மாலை தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி, பசு நெய் கலந்த பஞ்சாமிர்தத்தை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைத்து கிரிவலம் வரும் அடியார்களுக்கு வழங்கி வந்தால் தங்க, நவரத்தின வியாபாரிகள் நலம் அடைவர். ஆண் துணை இல்லாத குடும்பங்களிலும், ஆண் வாரிசுகள் இல்லாத தம்பதிகளும் தக்க நிவாரணம் கிடைக்கப் பெறுவார்கள்.

5. கும்பகோணம் அருகே வெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீராம மூர்த்தியை தரிசனம் செய்து இங்குள்ள சுக்ர தீர்த்தத்தில் நீராடி திண்டு தோசை, பெரிய வெங்காயம் கலந்த சட்னியுடன் தானம் அளித்தலால் ஆண்கள், பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் பெற முடியாத சுக்ர சக்திகளை ஓரளவு திரும்பப் பெறலாம். கம்ப்யூட்டரில் நீண்டநேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் நோய்களுக்கு நிவர்த்தி தரக் கூடிய தலம். ஆனால், மாதம் ஒரு முறையாவது இங்கு நீராடி வருதல் அவசியம்.

எண் 7

1. சப்த ரிஷிகள் அருளும் லால்குடி போன்ற சிவத்தலங்களிலும், சப்தரிஷீஸ்வரர் என்று இறைவன் நாமம் பூண்ட திருத்தலங்களிலும் சப்தமி திதிகளில் வழிபட்டு மஞ்சள் நிற ஆடைகள், உணவுகள், ஆபரணங்களைத் தானமாக அளித்தலால் இசைத் துறையில் உள்ளோர் முன்னேற்றம் அடைவர்.

2. அபூர்வமாக ஏழு பிரகாரங்களுடன் காட்சி தரும் பிரம்மாண்டமான திருக்கோயில்களான ஸ்ரீரங்கம், திருஅண்ணாமலை, மன்னார்குடி போன்ற திருத்தலங்களில் தினம் ஒரு பிரகாரத்திலாவது வலம் வந்து வாரத்தின் ஏழு நாட்களிலும் வழிபட்டு வருவதால் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு வழிகாட்டுதல் இன்றி தவிப்போர் தகுந்த வழிகாட்டியை அடைவர். ஆழ்ந்த நம்பிக்கை உடையோருக்கு முக்தியையே அளிக்கக் கூடியது இந்த சப்த பிரகாரங்கள் வழிபாடு. இவ்வாறு திருவரங்க சப்த பிரகாரங்களை 18 முறை நமஸ்கார பிரதட்சணத்துடன் வழிபட்ட பின்னரே ராமானுஜருக்கு அவருடைய குருநாதருடைய தரிசனம் கிட்டியது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

திருஅண்ணாமலை திருத்தலம் இறைவனே வலம் வரும் கிரிவலப் பாதையையே ஏழாவது பிரகாரமாக உடையது என்றால் இதைவிட சிறப்பான ஒரு பிரகாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரிசனம் செய்ய முடியுமா? பலரும் கிரிவலப் பாதையின் மகத்துவம் அறியாததால்தான் அதைச் சாதாரண வீதி, சாலை என்று எண்ணுவதால்தான் அதில் செருப்புகள் அணிந்து நடப்பது, கிரிவலப் பாதையில் எச்சில் துப்புவது போன்ற அசுத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அது சக்தி வாய்ந்த ஏழாவது பிரகாரம் என்பதை இனியாவது உணர்ந்து அங்கு முறையோடு கிரிவலம் வந்து அளப்பரிய பலன்களை அள்ளிச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

3. நமது பூலோக கணக்கில் சப்த ஸ்வரங்கள் என்ற ஏழு ஸ்வரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மற்ற லோகங்களில் ஏழிற்கும் மேற்பட்ட ஸ்வரங்களும், ஸ்வர தேவதைகளும் உண்டு. திருச்சி அருகே செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரரேஸ்வரர் திருத்தலத்தில் காணப்படும் இசைத் துõண்களைப் போல எங்கெல்லாம் இசைத் துõண்கள் உள்ளனவோ அத்திருக்கோயில்களில் வீணை, வயலின் போன்ற வாத்ய கருவிகளை வாசிக்கும் ஏழை இசைக் கலைஞர்களைக் கொண்டு இறைவனுக்கு நாதோபசாரம் செய்து மகிழ்வித்து, அந்த வித்வான்களுக்கு தக்க சன்மானம் வழங்கி கௌரவித்தலால் நரம்பு சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர் நலம் அடைவர்.

4. திருத்தனி திருத்தலத்தில் அமைந்துள்ள கன்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் சப்தரிஷி தீர்த்தத்தில் நீராடி தினைமாவு தேன் கலந்த உணவை பக்தர்களுக்குத் தானமாக அளித்து வந்தால் உடல், மன வியாதிகளால் தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நிறைவேறும். திருமணத்திற்குப் பின் தஞ்சை கரந்தை திருத்தலத்தில் அருளும் ஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்டரை வணங்கி நன்றி செலுத்துதல் அவசியமாகும். அப்போதுதான் பிரார்த்தனை முழுமை அடைகிறது என்பதை மனதில் கொள்ளவும்.

எண் 8

1. காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எண் எட்டு. அதனால்தான் எட்டை கால எண் என்றும் அழைக்கிறோம். ஒரு நாளின் பகல் பொழுதை ஒன்றரை மணி நேரம் கொண்ட எட்டு முகூர்த்தங்களாகவும் , இரவுப் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் பிரித்து கணக்கிடுவதால், எண் எட்டிற்கு பைரவ சக்திகள் மிகுந்திருக்கும். சீர்காழி, திருஅண்ணாமலை போன்று அட்ட (எட்டு) பைரவ மூர்த்தி அருளும் தலங்களில் தேய் பிறை அஷ்டமி தினங்களில் வழிபாடுகளை இயற்றி முந்திரி பருப்பு பாயசம் தானமாக வழங்குவதால் நேரம் காலம் பார்க்காது நிகழ்த்திய திருமணம், கிருஹப் பிரவேசம் போன்ற நற்காரியங்களில் ஏற்பட்ட கால தோஷங்களுக்கு ஓரளவிற்குப் பிராயச்சித்தம் கிட்டும்.

2. இறைவனே பைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருத்தலம், பைரவர் தனிச் சன்னதி கொண்டு அருளும் திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு, திருவாஞ்சியம், திருச்சி (பெரிய கடைவீதி ஸ்ரீபைரவர் கோயில்) போன்ற திருத்தலங்களில் இம்மூர்த்தியை வழிபட்டு நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி, கடலை மிட்டாய் போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத ஆபத்துக்கள் நீங்கும். இரவு நேரப் பயணங்களில் ஏற்படும் கால தோஷங்களுக்கு மிகக் குறைந்த அளவில் பரிகாரம் கிட்டும். இரவு நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பொதுவாக எவ்வித பரிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் இந்த பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

3. எண் எட்டிற்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அவதார மூர்த்திகளில் யாருக்குமே புரியாத புதிராக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளங்குவது போல எண் எட்டின் மகிமையும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டின் மகத்துவமும் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. கால தேசத்தைக் கடந்த நிலையில் நிற்கும் உத்தம பெருமாள் பக்தர்கள்தான் எட்டின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் அது மிகையாகாது.

கீழிருந்து மேலாகப் பார்த்தாலும், வலமிருந்து இடமாகப் பார்த்தாலும் எட்டின் தோற்றம் மாறாது என்பதே வேறு எந்த எண்ணிற்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.
மேலும், கையை எடுக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எட்டு என்ற எண் உருவத்தை எழுதிக் கொண்டே இருக்கலாம்.

இதனால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அலைபாயும் மனதை அடக்கி ஆள்வதே எண் எட்டு ஆகும். மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இந்த யுக்தியைத்தான் கையாண்டார். அதாவது கீதை என்ற ஒப்பற்ற தத்துவத்தை அர்ச்சுனுக்கு புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால், மிகவும் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு முனைப்பட்ட மனதுடன் கேட்க வேண்டும் அல்லவா? இவ்வாறு ஒரு முனைப்பட்ட சக்தியைத் தருவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் அஷ்ட வக்ர சக்திகளைப் போர் முனையில் நிறுவினார். அஷ்ட வக்ர சக்திகளைப் பற்றி மனித மனம் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதை எண் எட்டில் உருவகப்படுத்திப் பார்க்கலாம்.

மேலே ஒரு வட்டமும் கீழே ஒரு வட்டமும் இணைந்து உருவாவதுதானே எட்டு. இதில் மேல் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும், கீழ் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும் அஷ்ட வக்ர சக்திகளைக் குறிக்கின்றன.இந்த அஷ்ட வக்ர சக்திகள் எல்லாத் திசைகளிலும் சுழலும் தன்மை உடையது. இவ்வாறு எட்டுடன் சுழலும் மனச் சக்தியானது மெல்ல மெல்ல இரண்டு வட்டங்கள் சந்திக்கும் நடுப் புள்ளியில் வந்து சேர்ந்து விடும். அந்நிலையில் மனக் குழப்பம் நீங்கி தெளிவு பெறும். இவ்வாறு அர்ச்சுனனின் மனம் தெளிவடைந்தபோதுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதை என்னும் அரிய உபநிஷத்தை உபதேசித்தார். அன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்த அஷ்ட வக்ர தத்துவமே இன்றைய விஞ்ஞானத்தில் அணு ஆராய்ச்சி, வானிலை, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் குழலூதும் திருஉருவத்தை வீட்டில் வைத்து முடிந்தபோதெல்லாம் அவர் திருஉருவத்தை மனக் கண் முன் கொண்டு வந்து தியானித்துக் கொண்டிருந்தால்தான் எட்டைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆத்ம விசாரத்திற்கு முன்னோடியாக இருப்பதுதான் குழலுõதும் கிருஷ்ணனின் திருஉருவம்.

4. ஏற்கனவே கூறியதுபோல் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் காற்றில் அகப்பட்ட பஞ்சின் நிலையில் இருப்பதால் விதியின் வலிமையான பிடியில் இருந்து ஓரளவு விடுதலை பெற உதவுவதே திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி திருத்தல வழிபாடு.

எண் 9

1. எண் வரிசையில் கடைசியாக வரும் 9 பூரணத்துவத்தைக் குறிக்கிறது. எந்த எண்ணின் ஒன்பது மடங்கும் ஒன்பதாகவே வரும். எனவே, ஒன்பதை கடைசி எண் என்று சொல்லாமல் முழுமையான எண், பூரணமான எண் என்று சொல்வதே சிறப்பு.

எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை நினைத்து காரியத்தை ஆரம்பித்து, அந்தக் காரியம் நிறைவேறியவுடன் ஆஞ்சநேய மூர்த்திக்கு நன்றி சொல்லி முடிப்பது வழக்கம். இந்த இரண்டு மூர்த்திகளுக்குமே உரிய எண்ணாக ஒன்பது இருப்பதே அதன் சிறப்பு.

உலகிலேயே பெரிய பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையாரை ஒன்பது முறை கிரிவலம் வந்து வணங்குவது சிறப்பான வழிபாட்டு முறையாகும். கிரிவலத்தின்போது பூரணக் கொழுக்கட்டைகளை தானமாக அளித்தலால் பாதியில் நின்று போன திருமணங்கள், வீட்டு மனை வேலைகள், கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள், குளம், கிணறு தோண்டும் வேலைகள் நிறைவு பெறும்.

2. நவகிரக வழிபாடு தோன்றுவதற்கு முன்பே நிலவிய திருமழபாடி போன்ற சிவத்தலங்களில் நவகிரக சக்திகளை மூலவரே ஏற்று அருள்பாலிப்பதால் இத்தலங்களில் ஒன்பதின் சக்திகள் அபரிமிதமாக இருக்கும். ஒன்பது குழிகள் கொண்ட பணியாரச் சட்டியில் இனிப்பு பணியாரம் சுட்டு ஆடு மாடு மேய்ப்பவர்களுக்குத் தானமாக வழங்கினால் நாற்கால் பிராணிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம். புதிது புதிதாக வரும், இனந் தெரியாத காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

3. இறை மூர்த்திகள் வில், அம்பு, வேல், கத்தி போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருகிறார்கள் அல்லவா? இந்த ஆயுதங்களால் அவர்கள் தீயவர்களைத் தண்டிக்கிறார்கள் என்று கூறுகிறோம். உண்மையில் கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. அவரவர் செய்த நல்வினை தீவினை சக்திகளே மனிதர்களைத் தண்டிக்கின்றன.

ஒரு ஜீவனின் அகங்காரம் காரணமாக அத்து மீறிய கொடுமைகள் நிகழும் இறைவன் பல அவதாரங்கள் மூலம் அந்த ஜீவனின் ஆணவத்தை மட்டுமே அழிக்கிறான். இறை மூர்த்திகளின் இந்த ஆயுதங்களை நாம் எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் எல்லா அனுகிரகங்களையும் அந்த ஆயுதங்களின் மூலமாகவே பெறலாம்.

இம்முறையில் ஏற்பட்டதே பெருமாளின் சங்கு, சக்கர வழிபாடு. அதே போல சிவபெருமான் தாங்கி இருக்கும் மழுவானது ஒன்பதின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் திருக்கோயில்களில் காட்சி தரும் இந்த மழு ஆயுதத்திற்கும், மற்ற ஆயுதங்களுக்கும் சுத்தமான நல்ல எண்ணைக் காப்பிட்டு, கையால் அரைத்த சந்தனப் பொட்டிட்டு வணங்குவதால் தலைக்கு வந்த துன்பங்கள் தலைப்பாகையோடு போக ஈசன் அருள்புரிவார்.

4. அபூர்வமாக ஒன்பது கரங்களுடன் அருள்புரியும் ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாடு எண் ஒன்பதின் சக்திகளை எளிதில் பெற உதவும் உத்தம வழிபாடாகும். இதிலும் விசேஷமாக ஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் மிளிரும் சக்கரத்தை வணங்கி வருதல் மிகவும் சிறப்பு. நாம் வாழும் பூமிக்கு மூன்று விதமான சுழற்சிகள் உண்டு. அதாவது, தன்னைத்தானே சுற்றி வருதல், சூரியனைச் சுற்றி வருதல், தனது அச்சில் சுழல்தல் என்று மூன்று விதமான சுழற்சி முறைகள் மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்த ஒன்று. இவை மட்டுமல்லாமல் நாம் அறியாத பல சுழற்சி முறைகள் பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் உண்டு. இந்த சுழற்சி ரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். பொருட்களின் சுழற்சி முறைகளில் இன்றைய கலியுக மக்களுக்குத் தேவையான ஒன்பது சுழற்சி அனுகிரக சக்திகளை அளிப்பதே ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் பிரகாசிக்கும் சக்கரமாகும். தொடர்ந்து பல்லாண்டுகள் ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டை நிறைவேற்றி வந்தால் மனிதனின் ஊனக் கண்கள் மூலமாகவே இந்த ஒன்பது விதமான சுழற்சிகளையும் தரிசனம் செய்ய முடியும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை முறைகளை ஸ்ரீஆயுர்தேவி மகிமை என்னும் எமது ஆஸ்ரம நூலில் காணலாம்.

... சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் @ http://kulaluravuthiagi.com/kusa.htm




3 comments:

  1. Sir shree Aayurdhevi photo post potal nandraga irukkum sir pls...

    ReplyDelete
  2. *உங்களில் யாருக்காவது ஏன் இறைவனுக்கு ஒற்றை எண் முறையில் வழிபாடு நடக்கிறது என தெரியுமா????*
    உதாரணமாக இறைவனுக்கு தூப தீபம் காட்டினால் மூன்று முறை சுற்ற வேண்டும் தோப்புக்கரணம் போட்டால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றை எண்களே சிறந்தது எனவும்
    வாழைப்பழம் இறைவனுக்கு படைக்கும் போது அதிலும் 5,7 ,.......காய்கள் தான் இருக்க வேண்டும் என்கின்றார்கள் இதற்கு காரணம் என்ன.....??? தெரிந்தவர்கள் *பதிலளிக்கவும்* 🙏

    ReplyDelete