Tuesday, October 6, 2015

திருவண்ணாமலையின் புகழ் .....



அண்ணாமலையின் வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அங்கே அருணாசல யோகியாக, அருணகிரிச் சித்தராக ஸ்ரீ அண்ணாமலையாரே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இறைவனை நோக்கி இறைவனே தவம் செய்யும் ஒரே தலம் உலகில் அண்ணாமலை ஒன்று தான்.
பகவான் ரமணர் இந்த மரத்தைக் காண ஒருமுறை சென்று குளவி கொட்டியதால் அல்லலுற்றுத் திரும்பி விட்டார். யாராலும் காண முடியாத ஓரிடத்தில் இந்த விருட்சம் அமைந்திருக்கிறதாம். அங்கே பல சித்தாதி யோகியர்கள், முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பர் என்கிறார் ரமணர்.

இவர் இவ்வாறு திருவண்ணாமலையின் புகழ் பாட,
‘அண்ணாமலை அடைந்தக்கால் அனைத்துஞ் சித்திக்குமே உண்ணாமுலையாரை கை தொழுதக்கால் உன் எண்ணமெல்லாம் ஈடேறும் பொய்யொன்றுமில்லை சத்தியஞ் சொன்னோம்’’
என்று தம் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார் அகத்தியர்.

அகத்தியர், திருவண்ணாமலையாரை எப்போது தரிசித்தால் நற்பலன் நிரம்பப் பெறலாம் என்று சொல்லியிருப்பதைக் காணலாம்:

‘‘அண்ணாமலையாரைத் தொழத் தேவரும் வர கண்டேன் சிவனே
அயனும் மையானும் (மை போன்ற கரிய வர்ணம் கொண்ட விஷ்ணு),
இந்திரனும், மந்த ப்ரதோஷ (சனி பிரதோஷ) காலத்து வருதல் தப்பாதே
அந்நாளண்ணாமலையாரை வேண்டித் தொழ, யெண்ணிய கருமமது சித்திக்குந் திண்ணமே’’
என்கிறார் அவர்.
33 சனி பிரதோஷ நாட்களில் அண்ணாமலையாரை தொழுதால், முடியாதது என்று இப்பூமியில் எதுவும் இல்லை என்கிறது சித்தர் நாடி.

இது மட்டுமல்ல காமதேனுக் கடவுளும், கற்பக விருட்சமும், ஞானசம்பந்தன் உள்ளிட்ட நாயன்மார்களும் பௌர்ணமி திதியிலும் கார்த்திகை தீபத் திருநாளிலும் அருள்மிகு அண்ணாமலையரை தொழுகின்றனர் என்றும் கூடுதலாக விவரிக்கிறார் அகத்தியர்.

‘‘பசுத் தேவியுமெண்ணியதை யீயுந்தருவுமின்ன பிற ஞானியரு போகியருஞ் சம்பந்தனுள்ளிட்ட நாயனாரும் தொழுந் தருணமாம் கார்த்திகாயன முழுமதி தனி லண்ணாமலையாரை கை தொழுதக்கால் யெண்ணியதெல்லாஞ் சேரும். திண்ணமாய் மொழிந்த மொழி பற்றி யுய்வீரே’’ என்கிறார்.


திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment