Thursday, November 26, 2015

சுவாமிமலை திருத்தலத்தின பெருமைகள்



முருகப் பெருமான் அமர்ந்த சுவாமிமலை திருத்தலத்தின பெருமைகள் .. (ஸ்ரீ அகத்திய மகரிஷி)


பிரம்மதேவன் முதலான தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் முருகன் வாழும் சுவாமிமலையில் எப்போதும் வசிக்க ஆசைப்படுகின்றனர்.

குஹன் ஈஸ்வரனுக்கு பிரணவத்தை உபதேசித்த நிகழ்வை பூமியில் மனிதருக்கு உணர்த்த உருவாக்கப் பட்ட புண்ணிய ஸ்தலம். ஆதலால், இதை கைலையை விட உயர்ந்த ஸ்தானம் என்று பெரியோர் கூறுவார்.

முருகனுடைய மூர்த்தி இங்கு ஆகாச கங்கையாக விளங்குகிறது.

இம்மலையில் உள்ள அறுபது படிகளும், வருஷ தேவதைகள். ஆறு ருதுக்களும் அடிவார மலைகள், கோபுரங்கள் சப்த மாத்ரு கணங்கள். கோவில் வாசற்படிகள் தேவ மகளிர்.

மலை ஏறும் பொழுது முருகன் நினைவுடன் ஒவ்வொரு படிகளுக்குரிய வருஷ தேவதைகளுக்கு தேங்காய் நிவேதனம் செய்து கற்பூர ஆராதனையுடன் வழிபடவேண்டும்.

முருகன் இருக்கும் விமானத்துக்கு "அசலானந்தம்" என்று பெயர். விமானத்திலுள்ள ஷண்முகனை வழிபடுபவர் மறுபடியும் இவ்வுலகில் பிறக்கமாட்டார்கள்.

முதலில் சுவாமிநாதனை தரிசித்த பின்னரே அடிவாரத்தில் உள்ள பரமேஸ்வரனை தரிசிக்க வேண்டும்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் முருகனை வழிபடுபவன், உலகின் தலைவனாக விளங்குவான்.

ஸ்ரீ சுவாமிநாதனுக்கு அபிஷேகம் செய்கிறவன் சகல சம்பத்துக்களும் பெற்று வாழ்வான்.

அங்கப்ரதக்ஷிணம் செய்பவன் கோரிய பொருளை பெறுவான்.

சித்திரை, வைகாசி, தை மாத பௌர்ணமிகளில் சுவாமிமலையில் பிரதட்சிணம் செய்தால் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்து விடுபடுவான்.

பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை வழிபட்டு, பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தானம் ஆகியவைகளினால் அபிஷேகம் செய்தால், எல்லா விருப்பங்களும் நிறைவேறும். இது சத்தியம்.

தை பூச நட்சத்திரத்தில் முருகனை வழிபாட்டு பிரம்மா முதலிய தேவர்கள் தாங்கள் கோரிய பலனைப் பெறுகிறார்கள். எனவே, தை மாத பூச நட்சத்திரத்தில் யார் ஒருவர் சுவாமிநாதனை தரிசித்து அங்கப்ரதக்ஷிணம் செய்கின்றார்களோ, அவர்களுடைய முன்னோர்கள் மூன்று கோடி தலைமுறையினர் கரை ஏறுகின்றனர். முறைப்படி படி ஏற முடியாவிட்டால் முதல் படிக்கட்டுக்கும், கடைசிப் படிக்கட்டுக்கும் பூசை செய்துவிட்டு படி எறவேண்டும்.

சண்டிகை முதலான தேவதைகள் மலையைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களை வணங்கிய பின்னரே மலை ஏறவேண்டும்.

தைப் பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் போகிறேன் என்று சொன்னாலே, முருகனுடைய அருள் கிடைத்துவிடும். அஸ்வமேத யாகப் பலன் கிடைக்கும்.

பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் புறப்படுகிறவன் குகனாகவே ஆகிவிடுகிறான். பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை தரிசிப்பதற்கு முன்பாக தர்மம் செய்தால் அவன் குபேர சம்பத்தைப் பெறுவான்.

மௌனத்துடன் சென்று தரிசனம் செய்தால் தேவர்களின் அதிபதியாவான்.

அங்குள்ள குமாரதீர்த்தத்தில் நீராடினால் வம்சம் சிறப்புற்று விளங்கும்.
குமார தீர்த்தத்தில் மண் எடுத்து படிக்கட்டுகள் கட்டி திருப்பணிகள் செய்பவன் வம்சம் சிறந்து விளங்கும்.

ஸ்ரீ சுவாமிநாதனை வணங்கினாலோ, சன்னதியில் தீபம் ஏற்றி வைத்தாலோ, பில்வ தளங்களால் அர்ச்சனை செய்தாலோ, அவன் தெய்வாம்சம் பொருந்தியவனாகிறான்.

பால் காவடியில் எல்லா தேவர்களும் வசிக்கின்றனர்.

வேலைக் கையில் தாங்கிய குமாரனுடைய கோவில் விமானத்தை தூர நின்று தரிசித்தாலே எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.



6 முகம், 12 ஆயுதம் ஏந்திய கைகள் :-

இவருடைய ஆறு முகங்கள் முற்றறிவு, அளவிலின்பம், வரம்பில் ஆற்றல் உடைமை, தன்வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்ற ஆறு குணங்களாகும். அவர் திருமேனி அருள் உரு.

வேலாயுதம் தவிர மற்ற பதினோரு ஆயுதங்கள் ஏகாதச ருத்திரர்கள். வேல் ஞான உருவம். சேவல் கொடி நாத தத்துவம், மயில் விந்து தத்துவம். வள்ளி, தெய்வயானை இச்சா சக்தி, க்ரியா சக்தி தத்துவம்.

தேவசேனா, பக்தர்கள் பகவானை தேடி செல்லும் தத்துவம். மர்க்கட நியாயம். அதாவது குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை கெட்டியாக கட்டிக் கொள்வது.

வள்ளி நாயகி,, பகவானே பக்தர்களை நாடி வரும் தத்துவம். மார்ஜால நியாயம். தாய் பூனை தன் குட்டிகளை கவ்விச் சென்று பாதுகாப்பது போல.

வேல் இருப்பது ஆன்மாக்களுக்கு ஞானம் தர. அந்த ஞான அறிவை, இச்சையையும், கிரியையும் ஒழித்தால் அடையலாம்.

*****

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment