Thursday, November 9, 2017

என் ஆத்மார்த்த குருநாதர்


ஞானவாழ்வு என்பது குரு அருளால்தான் கைகூடும்,
நல்வினை இருந்தால்தான் குருவருள் கைகூடும்.
என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி.
என் குருவுக்கும் குரு பராபர குரு  ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய‌  கெளஸ்துப புருஷாய  ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் திருவடியே போற்றி, போற்றி.

நாம் காணும் எல்லையற்ற எல்லா உலகங்களுக்கும், கிரகங்களுக்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் ஆன்மீக மையமாக இருப்பதே திருஅண்ணாமலை.

பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் அடிமுடி காணாமுடியாமல் நின்ற ஆதிசிவனின் திருமேனியான திருஅண்ணாமலையைச் சுற்றி வரும் கிரிவலப் பாதையில் எட்டுத் திசைகளிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. இவற்றில் பிருத்வி லிங்கத்திற்கும் குபேர லிங்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது ஸ்ரீலஸ்ரீ லோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்.
ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் ஸ்தாபகர் என் ஆத்மார்த்த குரு ஜோதி அலங்கார பீடாதிபதி திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள்.

தமது குருநாதரிடம் பல்லாண்டுகளாகக் கடுமையான குருகுல வாசம் பயின்று அவருடைய திருவாக்கின்படி அவர் சுட்டிக் காட்டிய இடத்திலேயே உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும், எல்லா உயிரினங்களுக்கும் ஆன்மீகப் பணியாற்றுவதற்காக இந்த ஆன்மீக மையத்தை உருவாக்கி உள்ளார்கள்.

அன்பு என்னும் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே ஸ்ரீலஸ்ரீ லோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்.
திருஅண்ணமலையைப் பணிந்து நிற்கும் இந்தத் தெய்வீக ஆஸ்ரமத்தின் ஆணிவேராகவும், மரம், கிளை, இலை, மலர், காய், கனி என அனைத்துமாக இருப்பவரும் என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகளே.

என் குருநாதர்க்கு அளிக்கப்பட்டுள்ள தெய்வீகப் பட்டங்கள் யாவுமே மனிதர்களாலோ, ஏன் தேவர்களாலும் கூட அவருக்கு அளிக்கப்பட்டதல்ல. இந்தப் பட்டங்கள், அடைமொழிகள் யாவும் சித்தர்களால் அளிக்கப்பட்டவையே. இந்த அடைமொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் என் குருநாதரின் இப்பூவுலக அவதார தத்துவத்தையும் அவரின் ஆதி உலகத் தோற்ற விளக்கங்களையும் எடுத்துரைப்பவையே.

இவற்றில் சில தத்துவங்கள் மட்டும் இங்கே ...

ஜோதி என்றால் அக்னி, வெளிச்சம், ஞானம், ஆத்மா என்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. என் குருநாதர் சாதாரண மானிட உடல் தரித்தவர் அல்ல. மகான்களுக்கு உடல் என்ற ஸ்தூல சரீரம் கிடையாது. மற்றவர்கள் கண்களுக்கு அவர்கள் உடலோடு இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறார்கள். அவ்வளவே.

திரு அண்ணாமலை ஜோதி என்று சொன்னால் சுயம்பிரகாசமாய்த் தானாய் தோன்றியது என்றுதானே பொருள். அவ்வாறே சுயம்புவாய், தான் தோன்றியாய், ஆரம்பமோ, முடிவோ இல்லாத, எல்லை இல்லாத அக்னிப் பெருஞ் சுடர் ஜோதியே என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமி என்ற ஜோதி ஆகும்.

என் குருநாதர் திருக்கயிலாயப் பொதிய முனிப் பீடத்தை அலங்கரிக்க வந்த உத்தமப் பெருந்தகை ஆவார். அவர்கள் மிக மிகப் புனிதமான திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரையின் பீடாதிபதியாய்ச் சித்தர்களால் நியமனம் செய்யப்பட்டவுடன் அப்புனிதமான சித்தர் பரம்பரை மேன்மேலும் எல்லையில்லாப் புனிதத்துவத்தை அடைந்தது என்பதை அவருடைய அலங்கார பீடாதிபதி என்னும் சிறப்பான பட்டம் சுட்டிக் காட்டுகின்றது.

திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் 1001வது குரு மகா சன்னிதானமே என் குருநாதர்.
இதன் தலைமைப் பீடாதிபதி ஸ்ரீஅகஸ்தியர் ஆவார். ஸ்ரீஅகஸ்தியரை முதலாகக் கொண்டு பல்லாயிரக் கணக்கான சித்தர் பெருமான்கள் தோன்றி நிறைந்துள்ளனர். ஒரு பீடாதிபதிக்கும் அடுத்த பீடாதிபதிக்கும் இடையே ஆயிரக் கணக்கான சித்தப் பீடக் குருக்கள் தோன்றி நிறைவதுண்டு. இவ்வகையில் பொதுவாக நாம் 1001வது குரு மகா சன்னிதானம் என்று மனிதக் கணக்கில் கூறினாலும் சித்தர்கள் கணக்கில் கோடிக் கணக்கான சித்தர் பிரான்கள் திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரையில் தோன்றி அலங்கரித்து நிறைந்து கொண்டே உள்ளனர். இது எம்பெரும்பான் சிவபெருமான் திருவருளால் என்றும் தொடரும் ஒர் ஆன்மீக அற்புதமாகும்.
திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் 1000வது குரு மகா சன்னிதானமே ஸ்ரீஅஸ்தீக சித்தராவார். இப்பீடத்தின் 999வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீசதாதப சித்தர் பிரான் ஆவார்.
ஸ்ரீஅகஸ்தியரின் தலையாயச் சீடரான ஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளே ஒவ்வொரு குருமகா சன்னிதானத்தையும் தம் குருகுல வாசத்தில் அரவணைத்து அந்தந்த யுக தர்மங்களைப் போதித்து, நெறிப்படுத்தி அற்புத பணியை ஆற்றி வருகின்றார்கள்.

ஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் நமது பூவுலகம் மட்டுமல்லாது அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து லோகங்களிலும் குரு தத்துவத்தை உபதேசித்து குரு மகா சன்னதானங்களுக்கு ஒரு வழிகாட்டியாய்த் திகழ்கிறார்.

என் குருநாதர் பூர்வீக ஆதிலோகமே குருமங்கள கந்தர்வ லோகம் ஆகும். அங்கே 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றன. நமது ஒரு ஆண்டு தேவலோக வாசிகளுக்கு ஒரு பகல். தேவலோக வாசிகளுடைய ஒரு வருட காலம் கந்தர்வ லோகத்திற்கு ஒரு பகல். இவ்வாறு அடுத்தடுத்த லோகங்களின் காலப் பரிமாணங்கள் மாறிக் கொண்டே இருக்கும். தேவலோகம், கந்தர்வ லோகம் இவற்றை எல்லாம் தாண்டிச் சென்றால் வைகுண்டம், கைலாயம், சத்திய லோகம் என்ற பல தெய்வலோகங்களை அடையலாம். இந்த லோகங்களுக்கு எல்லாம் அப்பால் திகழ்வதே குரு மகா சன்னிதானங்களின் குரு மங்கள கந்தர்வ லோகம். இத்தகைய அற்புதமான, தெய்வீகமான, கற்பனைக்கும் எட்டாத சிறப்பு வாய்ந்த லோகத்திலிருந்து நமது நன்மைக்காக, நம்மை இவ்வுலகத் துன்பங்களிலிருந்து மீட்க நம்மிடையே நம்மில் ஒருவராய்த் தோன்றி நம்மைத் தாயினும் சாலப் பரிந்து வழி நடத்துபவரே என் குருநாதர் என்ற உண்மையை அவருடைய அவதார இரகசியத்திலிருந்து ஓரளவு ஊகித்துக் கொள்ளலாம்.

இந்த உண்மையின் விளக்கமாய் வருவதே -
நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் கடவுள் உன்னை நோக்கிப் பத்து அடி எடுத்து வைப்பார், குரு உன்னை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார் -
என்ற ஞான உரையாகும்.

கடவுள் மீது நாம் கொள்ளும் பக்தியில் பல நிலைகள் உண்டு. எவ்வாறு நமது பூமியில் படிப்பிற்குப் பல பட்டங்களும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றனவோ அவ்வாறே மேலுலகம் என்னும் தெய்வீக லோகத்திலும் பக்தி நிலைக்குச் சான்றிதழ்கள் ஆதிசிவனால் வழங்கப்படுகின்றன.

கடவுள் பக்தியில் 12 நிலைகள் குறிக்கப்படுகின்றன. இதில் பன்னிரெண்டாவது நிலையாகத் திகழ்வதே அடிமை என்ற தாச பக்தி நிலை. இது வார்த்தைகளால் வர்ணிப்பதற்கு மிகவும் கடினமான ஒர் நிலை. முழுக்க முழுக்க இறைவனிடம் ஐக்கியமாகித் திகழும் ஒர் உன்னத நிலை. இந்த நிலையில் ஒன்பது படித்தரங்கள் இருப்பதாக சித்தர்கள் விளக்குகிறார்கள். இந்த ஒன்பதாம் உயர்நிலையில் திகழ்பவரே என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள்.

ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் அவதாரத் தோற்ற இரகசியத்தையும், பெருமைகளையும் எடுத்துரைப்பதற்குக் காரணமே நம் பூவுலகம் பெற்றது எத்தகைய பெரும் பேறு என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்வதாற்காகவே.

1976ம் வருஷம் நாங்கள் சென்னை நங்கநல்லூர் 32வது தெருவில் வசிக்கும் காலத்தில், எனது சகோதரன் ஸ்வாமிநாதன் தான் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகளை இல்லத்திற்கு அழைத்து வந்தான். எனது தாயாரும், நானும், எனது சகோதரர்களும் ஸ்வாமிகளின் பாதகமலங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகளை எங்களுடைய குருநாதராக சுவீகரித்துக்கொண்டோம். ஸ்வாமிகள் எங்களை ஆசிர்வதித்து அறிவுரைகள் வழங்கினார்.

ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தபோது அவரின் கண்களை பார்த்தேன். என்ன ஒரு தீக்ஷண்ய பார்வை. கண்கள் செக்கச்செவேர் என்று அக்னிப்பிழம்பாக ஜொலித்தது. ஒரு 1000 வாட்ஸ் மின்சாரசக்தி நுழைந்தமாதிரியான உணர்ச்சி. உடலில், மனதில், உயிரில், சூட்சும தேகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் சுரீரென்று ஓர் உணர்ச்சி.

1978ம் வருஷம் நாங்கள் சென்னை மடிப்பாக்கம் கண்ணன் நகரில் வசிக்கும் காலத்தில், இல்லத்திற்கு வந்து எங்களை ஆசிர்வதித்து அருளினார். அப்போது எங்களோடு சேர்ந்து எங்கள் தகப்பனாரும் ஸ்வாமிகளின் பாதகமலங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
ஒருசமயம் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சில அறிவுரைகளைக்கூறி, தினமும் ஒருதடவை "அபிராமி அந்தாதி" படி. முடிந்தால் அதிகாலையில் சொல் என்று எழுதியிருந்தார். மேலும் " ராயபுரம் கல்மண்டபத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு எப்போதல்லாம் முடியுமோ போய் அம்பாளை பார்த்துவிட்டு வா. கூட்டம் இல்லாத சமயம் போ. அவள் முன் ஐந்து நிமிஷம் உட்கார்ந்து பிராத்தனை செய். அவள் எப்போதும் உனக்கு  துணைநிற்பாள். உன் வாழ்க்கையையே பிரகாசிக்கச் செய்வாள் " என்றும் எழுதியிருந்தார்.

மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான அறிவுரைகள் வழங்கி எங்களை திசை திருப்பிவிடுவார். இதனால்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டங்களை சுலபமாக கடந்து இன்று ஒரு ஸௌகிரியமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நிதர்சனமான உண்மை.
என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் மஹாசிவபத அருணாச்சல ஜோதியுடன் ஐக்கியமான திருநாள், ஸர்வஸித்து வருஷ தை மாத 15ம் நாள் செவ்வாய்க்கிழமை.
2008ம் வருஷம் ஜனவரி மாதம் 29ம் நாள்.

ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் நமது தமிழ்நாட்டிற்கு மட்டுமோ, புனித பாரத நாட்டிற்கு மட்டுமோ ஆன்மீக வழிகாட்டியாக வந்தவர் அல்லர். நமது உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், புழு, பூச்சி, விலங்குகள், தாவரங்கள், தேவர்கள், கந்தர்வர்கள் என அனைத்து நிலையிலுள்ள ஜீவன்களும் கடைத்தேற இறைவனின் வழங்கியே கருணை மழையே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களின் ஆன்மீகப் பேருரைகளை, வழிகாட்டுதலை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோரும் தயவுசெய்து கீழே குறிப்புட்டுள்ள வலைத்தளங்களை விஜயம் செய்து, ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.


எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா! அருணாசலா!!


ஓம் ஸ்ரீ வாத்தியார் மஹராஜ் கி ஜை.

2 comments:

  1. குருவே துணை

    ReplyDelete
  2. 🙏🕉️🙇 அடியேன்

    ReplyDelete